நபிமார்களுள் சிலரை ஏற்று சிலரை மறுப்பதே இறைத்தூதர்களிடையே பாகுபாடு காட்டுதலாகும்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 37 இல் இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டுதல் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

இவர்தான் பணியைச் சிறப்பாகச் செய்தார். அவர் சிறப்பாகச் செய்யவில்லை. என்றெல்லாம் கூறினால் அது பாகுபாடு காட்டும் குற்றமாக அமையும் என்று எழுதியுள்ளார். அதாவது

இந்த நபி தன் பணியைச் சிறப்பாகச் செய்தார். அந்த நபி தன் பணியைச் சிறப்பாகச் செய்யவில்லை என்று கூறுவது தான் இறைத் தூதர்களிடையே பாகு பாடு காட்டுதல் என்று ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.

மூஸா நபியின் இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருதிருந்தால் இதைவிடச் சிறப்பாகச் செய்திருப்பார்கள் என்று கூறினால் அது பாகுபாடு காட்டியதுடன் இறைவனின் தேர்வைக் குறை கூறிய குற்றமாகவும் அமையும் என்றும் இன்னொரு கருத்தையும் தருகிறார்.

எல்லாத் தூதர்களுமே தமக்கு வழங்கப்பட்ட பணியில் எள் முனையளவும் குறையில்லாமல், விலை போகாமல் மனிதர்களுக்கு அஞ்சாமல் மறுமையை விட இவ்வுலகைப் பெரிதாக நினைக்காமல் சிறந்து விளங்கினார்கள் என்று நம்புவதுதான் பாகுபாடு காட்டக் கூடாது என்பதுதான் கருத்து என்றும் எழுதியுள்ளார்.
(பார்க்க திருக்குர்ஆன் 2:136, 2:285, 3:84)

நம் விளக்கம்:

பி.ஜே காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனங்களுடன் 4:140 வசனத்தையும் நாம் ஆய்வுக்காகப் பார்க்க வேண்டும். பி.ஜே எழுதியுள்ள கருத்துக்களை தொகுத்துப் பார்த்தால், அந்த நபி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தார், இந்த நபி தன் பணியை சிறப்பாகச் செய்யவில்லை என்றும், மூஸா நபியின் இடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருதிருந்தால் அவரை விட இவர் தம் பணியைச் சிறப்பாகச் செய்திருப்பார் என்றும் நினைக்கக் கூடாது என்றும், எல்லாரும் தத்தமது பணியில் சிறந்து விளங்கினார்கள் என்றும் எண்ண வேண்டும் என்று எழுதியுள்ளார்.

அதாவது நபித்துவ பணியில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதே அதன் பொருள் என்று கருதுகிறார். இது சரியா என்பதனை அவர் காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து காண்போம்.

2:137-138 வசனத்தைக் காண்க இவ்விரு வசனங்களிலும்

1) அல்லாஹ்வையும், எங்களுக்கு வழங்கப்பட்டதையும்

2) இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் அவரது வழி தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும்,

3) ஏனைய நபிமார்களுக்கு வழங்கப்பட்டதையும்,
4) ஈமான் கொள்ள வேண்டும்.

5) நீங்கள் ஈமான் கொண்டது போல் அவர்களும் ஈமான் கொண்டால் நேர்வழி பெறுவர்.

6) இதைப் புறக்கணித்தால் எதிரிகளே என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, 1. அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளுதல், 2. அவன் அனுப்பிய நபிமார்கள் எல்லாரிடமும் ஈமான் கொள்ளுதல், 3. அவர்களுக்கு அருளப்பட்டதன் மீது ஈமான் கொண்டால் நேர்வழி எனக் கூறப்பட்டுள்ளது.

2:185 வசனத்தில் 1. அல்லாஹ்வை ஈமான் கொள்ளுதல், 2. மலக்குகள் மீது ஈமான் கொள்ளுதல், 3. வேதங்கள் மீது ஈமான் கொள்ளுதல், 4. அவனுடைய தூதர்கள் மீது ஈமான் கொள்ளுதல், 5.அவனுடைய தூதர்களுக்கிடையில் பாகுபாடு காட்டாதிருத்தல்.

3:84 வசனமும் 2:136 வசனமும் ஒன்றுதான் இம்மூன்று வசனங்களும்

1. அல்லாஹ்வின் மீதும், 2. அவனது மலக்குகள் மீதும், 3.அவனுடைய எல்லா நபிமார்கள் மீதும், 4. அவர்களுக்கு வழங்கப்பட்டவை மீதும் ஈமான் கொள்ள வேண்டும் என்றும் நபிமார்களுக்கிடையில் ஈமான் கொள்வதில் பாகுபாடுக் காட்டக் கூடாது என்றும் கூறுகிறது. அதாவது நபிமார்கள் சிலரை ஈமான் கொள்வதும் நபிமார்கள் சிலரை ஈமான் கொள்ளாதிருப்பதும் அவர்களுக்கிடையில் பாகுபாடு காட்டுவதாகும் என்று கூறுகிறது.

இக்கருத்தை 4:150 வது வசனம் தெளிவாகக் கூறுகிறது.

1. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மொத்தமாக மறுத்தல்.

2. சிலரை ஏற்றுக் மற்றும் சில தூதர்களை மறுத்தல்.

3. அல்லாஹ் அனுப்பிய நபிமார்கள் இவர்கள்தான். அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ரஸுல்மார்களை ரஸுல்மார்கள் இல்லை என்று கூறுவது அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் இடையில் பாகுபாடு காட்டுதல்.

IFT 1. திருக்குர்ஆன் விளக்கவுரை 2. அப்துல் வஹ்ஹாபின் தர்ஜுமா 3. சவூதி அரசின் வெளியீடு 4. அன்வாருல் குர்ஆன் 5. தப்ஸீர் இப்னு கஸீர் 6. ஜான் டிரஸ்ட் 7. தப்சீர் ஹமீத் 8. சிராஜுதீன் நூரியின் தர்ஜுமா 9. தாவூத் ஷா விரிவுரை 10. அப்துல் ஹமீது பாக்கவி.

4:150 அவர்கள் வசனத்திற்கு நபிமார்களுள் சிலரை ஏற்று சிலரை மறுப்பது என்றே பொருள் தந்துள்ளனர்.

நபிமார்கள் வரலாறு.

ஆதம் நபி முதல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த நபிமார்களின் வரலாற்றை பாகுபாடு என்ற கண்ணோட்டத்தில் நாம் ஆய்வு செய்தால்.

1) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நபி ஒருவர் அனுப்பப்பட்ட போதெல்லாம் ஒரு சிலர் ஈமான் கொண்டனர். பெரும்பாலார் மறுத்தனர். அந்தந்த நபியை ஈமான் கொள்வதில்தான் பாகுபாடு காணப்பட்டுள்ளதே தவிர பி.ஜே கூறுவது போல் அந்த நபியை விட இந்த நபி தம் பணியைச் சிறப்பாகச் செய்தார் என்றோ இவராக இருந்தால் அவரை விட தம் பணியைச் சிறப்பாகச் செய்திருப்பார் என்றோ பாகுபாடு காட்டப்பட்டதாக திருக்குர்ஆன் நபிமொழிகளிலிருந்து நமக்குச் தெரியவில்லை.

2) யூதர்களிடையே ஈஸா நபி வந்த போதும் சிலர் ஈமான் கொண்டனர்: பலர் மறுத்தனர். பி.ஜே பாகுபாடு பற்றிக் கூறியிப்பது போல் அவர்கள் கூறியதாகத் தெரியவில்லை.

3) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மூஸா நபியையும் ஈஸா நபியையும் ஈமான் கொண்டோருள் சிலர் நபி (ஸல்) அவர்கள் மீதும் ஈமான் கொண்டனர். ஆனால் பலர் மறுத்தனர். நபித் தோழர்கள்யாரும் முன்னர் வந்த நபிமார்களின் பணியைப் பற்றி பி.ஜே எழுதியிருப்பது போல் (ஓரிருவரைத் தவிர வேறு எவரும்) பேசியிருப்பதாக தெரியவில்லை. எனவே நபிமார்களுக்கு இடையே பாகுபாடு எனபது நபிமார்களுள் சிலரை ஏற்பதையும் சிலரை மறுப்பதையும் தான் குறிக்கும்.

திருக்குர்ஆன் இவ்வாறு கூறுவதிலிருந்து, எதிர்காலத்தில் முஸ்லிம் உம்மத்தில் திருக்குர்ஆனையும் நபிவழியையும் பின்பற்றி உம்மத்தி நபி வருவார் எனபதையும் அன்னாரை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும், அன்னாரை மறுப்பது, நபிமார்களிடையே வேறுபாடு காட்டுவதாகும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு நபியை மறுப்பது என்பது அதற்கு முன்னர் வந்த அனைத்து தூதர்களையும் மறுப்பதாகும். இன்றைய முஸ்லிம் உலகு தங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு தூதரை மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் ஆதம் நபி முதல் நபி (ஸல்) அவர்கள வரை எல்லாத் தூதர்களையும் மறுக்கிறார்கள் என்றுதான் பொருள். அதாவது இவர்கள் பிற நபிமார்கள் காலத்தில் இருந்தாலோ, பிற நபிமார்கள் இவர்கள் காலத்தில் இருந்தாலோ அந்தந்த நபிமார்களை இவர்கள் மறுத்துவிடுவார்கள். அல்லாஹ் நம்மை அந்த குப்ரிலிருந்து காத்தருள்வானாக.